Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சந்தேகத்திற்கு இடமான ஒரு மினி லோடு வேனை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த வேனில் அடுக்கி வைக்கப்பட்ட பப்பாளி பழங்களுக்கு அடியில் சுமார் 8 அடி நீளம் கொண்ட 20 உயர் ரக செம்மரக்கட்டைகள் பதுக்கி கடத்தப்படுவது தெரியவந்தது.
சுமார் 2 டன் எடைகொண்ட இந்த செம்மரக்கட்டைகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தியில் இருந்து சென்னைக்கு கடத்தப்படுவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். அதைதொடர்ந்து, செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லோடு வேனின் டிரைவரான ஆந்திராவை சேர்ந்த வெங்கையா (வயது 25) மற்றும் அவருடன் வந்த ரவி (25) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும் போலீசார் கும்மிடிப்பூண்டி வனசரகர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.